காதலையும் காமத்தையும் ஆண் மனம் குழப்பிக் கொள்வது ஏன்?

மனம்

ஆதி உண்மை இது. எப்போதும் ஆண் வேறு, பெண் வேறு. அவர்களின் உடல், மனம் எல்லாம் வேறு. ஒரே ஒற்றுமை… இருவரும் மனித இனம் அவ்வளவுதான்.

ஆண்களுக்கு வேட்டை குணம் உண்டு. இரை கிடைக்கும் வரை அந்த இரையைத் துரத்திப் பிடிப்பது இயற்கை. சில சமயம் அந்த  இரையாக பெண்களைக் கருதிவிடுவதும் நடக்கும்.

சுவாரசியமான இந்த விளையாட்டில் ஆண், பெண்ணை வீழ்த்தியவுடன் அவளைத் தன்னுடையவள் என்று கருத ஆரம்பிக்கிறான்.

எனவே அவள் மீது ஓர் அலட்சியம் ஏற்படுகிறது. சொந்தம் கொண்டாடும் ஒரு வேட்கையில் அதிகாரமும் வரலாம்.

பெண், தான் வேட்டையாடப்படும்வரை மிக அதிகாரம் மிக்கவளாக, உறவைத் தன் கையில் வைத்திருப்பவளாக, தான் சொல்லும் செயலை தன் ஆணைச் செய்யவைக்க முடிந்தவளாக இருப்பாள்.

இனி இந்த ஆண்தான் தனக்கு என்று தீர்மானம் செய்தவுடன் அன்பில் இணைந்து, குழைந்து அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவாள்.

அதுவரை சவாலாக, சுவாரசியமாக இருந்த பெண், தன் ஈர்ப்புத்தன்மையை இழக்க ஆரம்பிக்கும் புள்ளி இதுதான்.

அதேசமயம், பெண்ணுக்கு இந்தப் புள்ளியில்தான் தன் ஆணின் மேல் அக்கறை அதிகமாகும். தன் பாதுகாப்பு உணர்வு பலப்படும். இனி தன் இனவிருத்திக்கு இவன்தான் என்ற உணர்வில் தன்னை முழுமையாக ஒப்படைப்பாள்.

கிட்டத்தட்ட பல பெண்கள் அன்பின் சரணாகதி நிலையிலேயே இருப்பர். சிலர் விதிவிலக்கு. திருமணம், குழந்தைகள் போன்ற பிடிப்புகள் வேறு விஷயங்கள்.

இந்த விளையாட்டில் சுவாரசியம் இழக்கும் ஆணுக்கு ஒரு கட்டத்தில் சலித்துப்போகும். அந்தச் சமயத்தில் மெதுவாக அந்தப் பெண்ணை விட்டு விலக ஆரம்பிப்பான்.

ஆனால் அவளுக்கோ விலகல் பிடிபடாது. ‘சரி நாம் மிகவும் ஆதிக்கமாக இருந்துவிட்டோம் போல’ என்று தன்னை சரிசெய்ய ஆரம்பிப்பாள்.

எல்லாவற்றையும் அவனுக்குப் பிடித்தவாறு மாற்றிக்கொள்வாள். எனவே இன்னும் அவளின் சுயம் இழப்பாள்.

சுயம் இழந்த பெண்ணின் இயல்பு பறிபோகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனதளவில் கூடுதல் விலகல் நடக்கும்.

இன்னும் மோசமாக ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தில் வருவதுபோல ‘தங்கள் சித்தம் மன்னா’ என்ற அளவுக்குப் போவாள்.

இணை, துணை எல்லா உறவுகளுமே சரிசம நிலையில் இருக்கும்போது மட்டுமே ஈர்ப்பு வரும். பெண் மதிப்பு குறைந்து போகும்போது, அவள் மீதான பிரமிப்பு அகன்று காதலும் குறைய ஆரம்பிக்கும்.

ஆண் அவளிடம் இருந்து இன்னும் விலகுவான். அப்போது அவள் இன்னும் நெருக்குவாள். ஆணுக்கு தன் சுதந்திரம் பறிபோவது பிடிக்காது.

அந்த வெறுப்பில் இறுக்கமாவான். பெண்ணுக்கு அவன் மாற்றத்துக்கான காரணம் புரியாமல் அவன் என்ன செய்தாலும் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பிப்பாள்.

தன்னை நம்பாத பெண் மேல் அவனுக்குக் கோபம் அதிகமாகும். விலகல் விஸ்வரூபமெடுத்து நிற்கும்.

பல்வேறு ஆண் பெண் பிரச்னைகளின் ஆணிவேர்க் காரணம்… ஆணை ஆணின் இயல்போடு பெண்ணால் அணுக முடியாததும், பெண்ணைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஆண் அவளை அடைய நினைப்பதும்தான்.

பெண்ணுக்கு அரவணைப்பும், அதன் மூலம் கிடைக்கும் பாதுகாப்பும் முக்கியமென்றால், ஆணுக்கு உடற் பசி தீரலும், சுதந்திரமும் மிக முக்கியம்.

அதைத் தவிர தன்னுடைய வேலை மிகமிக முக்கியம். என்னதான் காதலாக இருந்தாலும் வேலை நேரத்தில் நெருக்கும் பெண் மேல் அவருக்கு வெறுப்புதான் வரும்.

பெண்களுக்கு உடனே எல்லாவற்றையும் பேசித் தீர்த்து, உடனே அனைத்தும் சரியாகிவிட வேண்டும். ஆண் மௌனத்தை ஆயுதமாக எடுப்பான்.

இவள் வார்த்தைகளை வாதை செய்யும் அளவுக்கு கூர் தீட்டி அனுப்புவாள். ஐந்தாம் உலகப்போர் ஆண், பெண் காதலில்தான் இனி அதிகம் நடக்கும்.

இந்தியாவில் காமம் பற்றிய புரிதல் இல்லாமலே வளர்ந்துவிடுகிறார்கள். இதில் பெண்கள் பூஜ்ஜியம் என்றுகூட சொல்லலாம்.

இனக்கவர்ச்சி, உடல் சார்ந்த ஈர்ப்பு எல்லாவற்றையும் காதலோடு குழப்பிக்கொள்வது நடக்கிறது. பெண்ணை உடலாகப் பார்க்கும் வழக்கம் இங்கு அதிகம்.

அவளை அடைய என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்ய ஆரம்பிக்கிறான் ஆண். மோகம் தீர்ந்த பின் அவனுக்கு ‘அவ்ளோதானா?’ என்று தோன்ற ஆரம்பிக்கிறது.

பெண்ணுக்கோ உடலைக்கூட மனதால் மட்டுமே தொட வேண்டும். அவளால் இவன் விட்டு விலகிச் செல்வதை தாங்க முடியாது.

உயிர் பிரியும் வலியாக உணர்வாள்.   தன்னை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக, ஏமாற்றியதாகக் கதறுவாள்.

ஆண், இந்த உணர்வு வேகம் கண்டு பயந்து திரும்பவே வர முடியாத இடத்துக்குப் போய்விடுவான். இதுதான் பெரும்பாலான காதல்களில் நடக்கிறது.

இந்த இடத்தில் பெண் புரிந்துகொள்ள வேண்டியது, ஆணின் உணர்வுகளை. ஆண் மிகமிக முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இது… ஒரு பெண், அதுவும் இந்திய சூழ்நிலையில் ஒருவனிடமே மனம் போக வேண்டும் என்ற சிந்தனைத் திணிப்பை சமூக வழக்கமாகக் கொண்ட பெண், ஆணை நிஜமாக விரும்பிவிட்டால், அவள் மனம் மாறுவது மிகக் கடினம்.

இந்தியா என்றில்லை, உலகம் முழுவதும் பெண் அவ்வளவு எளிதில் தான் நேசித்த ஆணை விட்டுச் செல்வதில்லை. பெண்களை பலவீனப் படுத்த சமூகம் பலவிதத்தில் ஈடுபடுவதையும் இந்த இடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது.

ஆண்களுக்கு ஒரு கோரிக்கை. காமம்தான் உங்களின் எதிர்பார்ப்பு என்றால், அதைத் தோழமையோடு சொல்லிவிடுங்கள்.

‘என்னால் கமிட்மென்ட்கள் கொடுக்க முடியாது’ என்று அவளிடம் தெளிவாக வரையறுத்துவிடுங்கள்.

காதலையும், காமத்தையும் குழப்பி ஒரு பெண்ணச் சிதைப்பது, அதனால் உங்களுக்கு ஏற்படும் குற்ற உணர்வில் தவிப்பது போன்றவை தவிர்க்கப்படும்.

ஆணும் பெண்ணும் இணைவதே இயற்கை, பிரிவது அல்ல. ஆண்கள் துரோகம் செய்வதில்லை, பெண்கள் ஏமாற்றப்படுவதில்லை.

ஆனால் அப்படித்தான் சமூகம் சொல்லிக்கொடுக்கிறது. தெளிவாகப் பேசுங்கள். உங்கள் அன்பை, ஆசையை நிர்ணயுங்கள்.

ஆண்கள் உலகம், அவர்களின் மனது பற்றி பெண் குழந்தைகளுக்கும், பெண்களின் மனது, அவர்களின் பிரச்னை பற்றி ஆண் குழந்தைகளுக்கும்   சொல்லிகொடுத்து, நடுவில் இருக்கும் இரும்புச் சுவற்றை தகர்ப்பதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கும் சமூகத்துக்கு அவசியத் தேவை.