மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் மதன் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு காணாமல் போனார். இவரை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வந்தனர்.

டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்தனர். மதனின் நெருங்கிய தோழி கீதாஞ்சலி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமறைவான பிறகு அவரிடம் மதன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதன் எங்கெல்லாம் சென்றிருந்தார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

எந்த பகுதிகளில் அவர் தங்கியிருந்தார்? என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ள போலீசார் 4 மாநிலங்களிலும் முகாமிட்டு சாதாரண உடையில் அங்குள்ள தங்கும் விடுதிகளில் மதனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். திருப்பூரில் ஒரு பெண்ணை சந்திக்க வந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், திருப்பூரில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மதனிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்ததும் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் நீதிமன்ற நேரம் முடிந்ததால், சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி பிரகாஷ் வீட்டில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 14 நாட்கள் அதாவது, டிசம்பர் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.