துடிதுடிக்க பாடசாலை மாணவன் வெட்டிக்கொலை: சக மாணவன் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருவரும் இருவரும் ஒரே பெண்ணை காதலித்துவந்த காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் நடந்து விபரீத சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கடேஷ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு மாணவர்களும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று வெங்கடேஷ் தனது விடுதியின் முன்பாக வெட்டி கொலை செய்யப்பட்டான்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் சுந்தர் மற்றும் சக மாணவன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து வெங்கடேஷை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதில் முக்கிய காரணமாக இருந்தது சுந்தர் ஆவார். இதுகுறித்து சுந்தர் பொலிசில் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் இதோ,

நானும், வெங்கடேசும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம். நாங்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் சமுதாய மாணவர்கள் எனக்கு ஆதரவாகவும், வெங்கடேசின் சமுதாய மாணவர்கள் அவனுக்கு ஆதரவாகவும் இருப்பது வழக்கம்.

எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். மேலும் பள்ளிக்கூடத்தில் எங்களது சமுதாயம் பற்றிய தகவல்களை எழுதி போடுவதில் எங்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதில் இருந்தே எங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நான் எங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தேன். அதே மாணவியை அவனும் காதலித்தான். இதனால் இருவருக்கும் பிரச்சினை அதிகமானது. நான் அவனை, அந்த மாணவியிடம் பேசக்கூடாது என்றேன். அவன் என்னை பார்த்து, நீ அவளிடம் பேசக்கூடாது என்றான்.

இதனால் நேற்று முன்தினம் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வைத்து வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் வந்து நான் காதலித்த மாணவி முன்பு என்னை அடித்து உதைத்தான்.

இது எனக்கு பெருத்த அவமானமாகி விட்டது. எனக்கு பல்வேறு வகையிலும் இடையூறாக இருக்கும் அவனை தீர்த்து கட்ட வேண்டும் என்று நான் திட்டமிட்டேன். எனது திட்டத்தை பழக்கடையில் வேலை பார்த்த எனது உறவினர் செல்வவினோத்திடம் கூறினேன். அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார்.

இதனையடுத்து இரவு 7 மணிக்கு விடுதியில் மாணவர்கள் சாப்பிடுகிற நேரத்தில் நாங்கள் இருவரும் அரிவாளுடன் சென்று வெங்கடேசை வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டோம்.

நள்ளிரவில் அழகநேரியில் நாங்கள் மறைந்து இருந்தபோது பொலிசார் எங்களை பிடித்து கைது செய்து விட்டனர் என கூறியுள்ளார்.