பறிபோய்விட்டதா கன்னியா வெந்நீர் ஊற்று ?

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 – 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன.இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இந்த வெந்நீரூற்று இலங்கையில் நடந்த உள்நாட்டுப் பிரச்சனைக் காலத்தின் போது களையிழந்து காணப்பட்டது.

ஆயினும் போர் முடிவுற்றதன் பின்னர் தற்போது அதிகமாக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் ஒரு சுற்றுலாத் தலமாக இந்த கிணறுகள் திகழ்கின்றன.

போர் முடிவுற்றதன் பின்னர் இந்த உல்லாசப் பிரயாண மையத்தைச் சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகச் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் தமிழ் மொழியிலும் செய்தியைக் கொண்டிருந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே செய்தியைக் கொண்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.

தமிழ் வரலாற்றின் படி, பத்துத் தலை படைத்த இராவணன் தனது தாயாருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்காக உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாகவும் அந்த இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று உருவாகியது . கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகள் பற்றிய நவாலியூர் சோமசுந்தரப் புலவரது ஒரு பாடல்:

“ காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல ஒன்று நீதி பெறா வேழைதுயர் மனம் போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம் போல ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி யாயில் ”

இது சிவ பூமி எனவும் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயின் கிரியைகளுக்காக உருவாக்கிய ஏழு கிணறுகளும் தற்போது இவ் நுழைவு சீட்டில் அனுராதபுர கால பெளத்தர்களுக்கு சொந்தமானது என்று உள்ளது .

கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவில் இன்று அத்திபாரம் மட்டும் தான் உள்ளது . புத்தரும் அரசமரமும் இப்போது முளைத்துள்ளது . பாவம் பிள்ளையார் ஒரு ஆலமர நிழலில் களைப்பாறும் நிலையை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது .