இனவாதம் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை: ஜனாதிபதி அதிரடி!

நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதூதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன, எம்பி ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், போலிஸ் மாதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

“இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்தார்.

அவ்வாறாயின், புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மாதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல், முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து,  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்தார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மங்களாராம சுமனரத்தின தேரர் மற்றும் தற்போது கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், சிங்கள தீவிர நிலைப்பாட்டாளர் டேன் பிரியாத் என்ற சுரேஷ் பிரியசாத் ஆகியோரை பற்றிய அமைச்சர்களின் விரிவான கருத்துகளை ஜனாதிபதி கேட்டறிந்தார். நாட்டின் தேசிய சகவாழ்வை அழிக்கும் அனைத்து இன, மத தீவிர நிலைபாட்டாளர்களையும் கைது செய்யும் நிலைப்பாட்டை ஜனாதிபதி இதன் பிறகே எடுத்தார்.