திருமண நாளில் நடந்த கோர விபத்து! உயிருக்கு போராடும் மணமக்கள்

தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் புதுமண தம்பதியினர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி விஜயலட்சுமி.

இவர்களுடைய மகன் ராஜகோபாலுக்கும்(வயது 28), இந்துமதி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதன்படி நேற்று முன்தினம் ராமேஸ்வரம் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து காரில் நால்வரும் சொந்த ஊரான கோவைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் இரவு வந்து கொண்டிருந்தபோது கலிக்கம்பட்டி பிரிவு அருகே எதிரேவந்த லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 4 பேரும் காருக்குள்ளேயே நசுங்கி படுகாயம் அடைந்தனர், உடனடியாக இவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்தில் மணமகனின் பெற்றோர் சீனிவாசன்- விஜயலட்சுமி பரிதாபமாக பலியாகினர்.

மணமக்கள் ராஜகோபால் மற்றும் இந்துமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.