ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது – நிதி அமைச்சர்

ஏ.டி.எம். (தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்) ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வரி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து அறவீடு செய்யப்படாது.

நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளினால் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது 5 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இதன்படி, வங்கியின் வாடிக்கையாளர்கள் தானியங்கி டெல்லர் இயந்திரங்களின் ஊடாக பணம் எடுக்கும் போது புதிதாக 5 ரூபா வரி அறவீடு செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.