ஜனாதிபதிக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டமை குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி நண்பகல் இந்த சந்திப்பு நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி, முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்திருந்தார் எனவும், அவரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.