மிச்செல் ஒபாமா ஒரு குரங்கு: இனவெறி கருத்து கூறிய மேயரின் பதவிக்கு ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவை வாலில்லா குரங்கு என விமர்சனம் கூறிய அந்நாட்டு பெண் மேயர் ஒருவரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய மூன்றாவது மனைவியான மெலினியா அந்நாட்டின் முதல் குடிமகள்(First Lady) என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

இது குறித்து மேற்கு வெர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறையின் இயக்குனரான Pamela

Ramsey Taylor என்பவர் சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஆஹா, அமெரிக்க நாட்டிற்கு தற்போது ஒரு அழகான, நாகரீகமான முதல் குடிமகள்(மெலினியா டிரம்ப்) கிடைத்துவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக வாலில்லா குரங்கு போன்ற தோற்றம் உடைய முதல் குடிமகளை(மிச்செல் ஒபாமா) பார்த்து மிகவும் சோர்வடைந்து விட்டேன்’ எனக் கருத்து கூறியுள்ளார்.

இயக்குனரின் இக்கருத்தை அந்நகர பெண் மேயரான Beverly Whaling என்பவரும் உற்சாகமாக வரவேற்று அக்கருத்தை மகிழ்ச்சியாக பலருடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் மற்றும் மேயரின் இனவெறி தொடர்பான இக்கருத்திற்கு தற்போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

மேலும், இருவரையும் உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாகாணத்தில் உள்ள கருப்பின மக்கள் உள்ளிட்ட பலர் போராடி வருகின்றனர்.