நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி எச்சரிக்கை

நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் ஈடுபட்டு வருகையில், சிலர் அதனை சமஷ்டி என விமர்சிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏற்கனவே தாமதமாகிப்போன நல்லிணக்கத்தை இனியும் வேடிக்கை பார்த்தால் தேசிய அழிவுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க செயலணியின் 2016ஆம் ஆண்டுக்கான ”நம்பிக்கைக்கான சிறகடிப்பு” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்-

”நாட்டில் பல வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தால் மக்கள் வேறுபட்டிருந்த நிலையில், நாம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளோம். எமது நாட்டிலுள்ள சிலருக்கு நல்லிணக்கம் என்ற சொல் வேடிக்கையாக தெரிவதாலேயே அந்த சொல்லை நிந்தனை செய்கின்றனர்.

குறிப்பாக நல்லிணக்கச் செயற்பாட்டினை சமஷ்டிக்கான செயற்பாடென எதிர்த்தரப்பினர் விமர்சிக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து செயற்படுவார்களாயின் அவர்கள் மீண்டும் கண்ணீர் சிந்தவேண்டிய நிலை ஏற்படும். நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை நிந்திப்பதானது தேசிய அழிவை ஏற்படுத்தும். எனவே நாம் முழு நாட்டு மக்களையும் ஒன்றுபடுத்தக்கூடிய திட்டங்களையே முன்னெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.