யாழில் ஆவா குழுவின் செயற்பாடு! நல்லாட்சி அரசாங்கத்திற்குள் முரண்பாடு

யாழில் செயற்படுவதாக பிரச்சாரம் செய்யப்படும் ஆவா குழு தொடர்பில் அரசாங்கத்திற்கள் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு தொடர்பாக ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்தினை வெளியிட்டு வருகின்றமை தற்போது குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு முரண்பாடான நிலைப்பாட்டுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன வெளியிட்டுள்ளார்.

அவரின் கருத்து தொடர்பில் அந்த முன்னணியின் தலைவர்களின் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் செயற்பாட்டிற்கமைய, அப்போதைய இராணுவ உயர் அதிகாரியினால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன அந்த குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தி இருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஆவா குழு தொடர்பில் அமைச்சர் அறிவித்திருந்தார் என ஐக்கிய தேசிய முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

எப்படியிருப்பினும் அமைச்சர் ராஜிதவின் கருத்திற்கு பின்னர் இந்த குழுவுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தனர்.

இதேவேளை யாழ் ஆவா குழுவுக்கு இராணுவத்தினர் தொடர்பு இல்லை என கூறுவதற்கு யாருக்கும் இயலாது என ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

இந்த நிலைமைக்கமைய ஆவா குழு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பாரிய கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் ஆவா குழு என்பது தற்போது தென்னிலங்கை அரசியல் நடவடிக்கைக்கு அமைய செயற்படுத்தும் குழுவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.