குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு சிறந்த வழிமுறைகள்!

அடம்பிடிக்கும் குழந்தைகள் இல்லாத வீடு இருக்கிறதா? அதுவும் அம்மாக்கள் சமைத்து ஊட்டிவிடுவதை, சாந்தமாக,  சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்; நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். ஆனால், அடிப்படையான உணவு உண்பதிலேயே பிரச்னை என்றால், என்ன செய்யலாம்?

*வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.

*ஒவ்வொரு வேளைக்கும் ஓர் உணவை அறிமுகப்படுத்த வேண்டும். காலையில் இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி போன்றவை. மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம். மாலையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் கொடுக்கலாம். ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடுக்கலாம். இந்த உணவுகளை மசித்துக் கொடுக்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பின் முட்டையின் வெள்ளைப் பகுதி, பசும்பால் கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு பாலில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவர்கள் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பிறகு, அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம்.  பற்கள் முளைக்க ஆரம்பித்ததுமே, அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கலாம்.

*பெற்றோர் என்ன செய்கின்றனரோ அதையேதான் பிள்ளைகளும் பின்பற்றுவர். நாம் எந்த மாதிரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கிறோம், எதைச் சாப்பிடுகிறோம் என்பதை குழந்தை கவனித்துக்கொண்டு இருக்கும். குழந்தை முன் ‘பீட்ரூட் பிடிக்காது’ என்றால், குழந்தையும் பீட்ரூட்டைத் தவிர்க்க தொடங்கும். எனவே, பெற்றோர் கவனமுடன் செயல்படுவது நல்லது.

* உணவு உற்பத்தியாவது எப்படி என சொல்லித் தந்து, அதன் மேல் மதிப்பை ஏற்படுத்தி, அவற்றை வீணாக்காமல் சாப்பிடவைப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது.

*சாப்பிடும்போது டி.வி-யைத் தவிர்த்து மெல்லிய இசையைக் கேட்டபடி சாப்பிட வைக்கலாம் அல்லது ஊட்டலாம். உணவு பற்றிய கதைகளைச் சொல்லலாம்.

*குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது கவனம் தேவை. அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்கலாம்.

*பள்ளி செல்லும் குழந்தைகள் சரியாக உண்ணாமல், உணவை வீணாக்குவது வாடிக்கை. அவர்களை ஈர்க்கும் விதத்தில் சுவையான உணவாக இருந்தால், வீணாக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, சதுர இட்லி, பொடி இட்லி, ஸ்டார் தோசை என மாற்றிக்கொடுக்கலாம். லன்ச் பாக்ஸில், சூப்பர் ஃபுட், டேஸ்ட்டி தோசை என ஜாமினால் எழுதி வைக்கலாம். அதைப் படித்ததும் ஆசையோடு சாப்பிடுவார்கள். கடலை உருண்டை, எள் உருண்டை, வீட்டில் செய்த பண்டங்கள், பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடத் தரலாம். தாளித்த மோர், நாட்டுச் சர்க்கரை சேர்த்த தயிர், லஸ்ஸி போன்றவற்றைத் தருவது நல்லது.

*வெளி உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது. வெளியில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, `ஒரு நாளைக்குத்தானே…’ என ஜங்க் ஃபுட் வாங்கித்தராமல், நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கித் தர வேண்டும். குடும்பத்துடன் சிறுதானியத் திருவிழா, பாரம்பர்யத் திருவிழாக்களுக்குச் சென்றுவரலாம். தினை முறுக்கு, கம்பு தட்டை என சுவைக்கக் கொடுக்கலாம். பருத்திப்பால், கேழ்வரகுப் பால் போன்ற ஊட்டச்சத்து பானங்களைக் கொடுத்து பழக்கப்படுத்துவது நல்லது.

நல்லுணவும் ஆரோக்கியமும் உங்கள் கையிலே!

உண்ணும் பழக்கம் கற்றுக்கொடுப்போம்!

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கை கழுவுதல், டைனிங் டேபிள் அல்லது தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல் ஆகியவற்றைச் சொல்லித் தர வேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

அவசர அவசரமாக, டி.வி பார்த்தபடி, புத்தகங்களைப் படித்தபடி இல்லாமல், உணவை நன்கு கவனித்து, சுவைத்து மென்று விழுங்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.