பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

தற்போது வீதிக்கு வீதி மழைக்கால காளான்களாய் அழகு நிலையங்கள் முளைத்திருக்கின்றன. பெண்களும் இங்கு சென்று ‘பிளச்சிங்’ செய்துகொள்ள விரும்புகிறார்கள்.

பிளச்சிங் செய்தால் நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து முகம் ‘பளிச்’சென்று ஆகும் என்பது பெண்களின் எண்ணம்.

ஆனால் உண்மையில் பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். அவை பற்றி…

பிளச்சிங் செய்தால் சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு, பிளச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள வேதியியல் பொருட்கள்தான் காரணம்.

எனவே அழகு நிலையங்களில் வேதிப்பொருட்களைக் கொண்டு பிளச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் கொண்டு பிளச்சிங் செய்து, பின் பால் அல்லது தயிர் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

அடிக்கடி பிளச்சிங் செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படக்கூடும். இதற்கு, பிளச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சிவிடுவதுதான் காரணம்.

பிளச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும்போது ஒருவித எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடும். இது சாதாரணமாக இருந்தாலும், சருமத்துக்கு நல்லதல்ல.

எனவே, வேதிப்பொருட்கள் மூலம் பிளச்சிங் செய்வதை எச்சரிக்கையோடு தவிர்த்துவிடுங்கள்.