பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றுஇன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது.

 

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பின் போது வடக்கிலே காணப்படும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகள் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சரை விளக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பொது மக்களின் காணிகள் விடுப்பில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை விபரித்ததோடு இந்த காணி விடுவிப்புகள் இன்னும் துரிதகதியில் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப்போல தொடர்ச்சியாகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.