ஒரு குழந்தை தினம் எவ்வளவு நீர் அருந்த வேண்டும்?

குழந்தைகள் தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தால் பெற்றோர்கள் அதைத் தடுப்பார்கள். ஆனால் குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தண்ணீர் குடிப்பதைத் தடுக்கலாம். ஆனால் இயல்பாக இருக்கும் நாட்களில் குழந்தைகள் தேவையான தண்ணீரைக் குடிக்க அனுமதிக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைகள் ஓடியாடி விளையாடும்போது தண்ணீர் வியர்வையாய் வெளியேறி விடுகிறது. அதனால் உடலுக்கு தேவையான தண்ணீர் அளவு குறைவதால் தாகம் எடுக்கிறது.

தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் வெப்பம் அதிகரித்து சிறுவர்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். சில குழந்தைகள் தண்ணீர் குடிக்கவே மறுத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தியாவது குறிப்பிட்ட அளவு தண்ணீரைக் குடிக்கச் செய்ய வேண்டும்.

நம் உடலின் செயல்பாடுகளை முறையாக செயல்படுவதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகள் நீரினால் உருவானது.

தசைகள் 70 சதவீதமும் மூளை 90 சதவீதமும் இரத்தம் 83 சதவீதமும் நீரால் உருவாகியுள்ளது. போதுமான அளவு நீர் உடலில் இருந்தால் பல பிரச்னைகளைத் தடுக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்  சீனியர் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.
எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்:
கீழ்காணும் வயதுடையவர்களுக்கு அவர்கள் தினசரி குறைந்தபட்சம் குடிக்க வேண்டிய நீரின் அளவு இது:

1 முதல் 3 வயது வரை – 4 டம்ளர்கள்
4 முதல் 8 வயது வரை – 5 டம்ளர்கள்
9முதல் 13 வயது வரை – ஆண்  8 டம்ளர்கள், பெண் 7 டம்ளர்கள்
11முதல் 18 வயது வரை – ஆண் 11 டம்ளர்கள், பெண் – 8 டம்ளர்கள்
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.5 லீட்டர் நீராவது கட்டாயம் குடிக்கவேண்டும். கட்டட வேலை, கல் உடைப்பது, மரம் வெட்டுவது போன்ற வெயிலில் வேலை செய்பவர்கள் 3 லீட்டர் நீர் குடிக்க வேண்டும். கோடைகாலம் வந்துவிட்டால் 4 முதல் 5 லிட்டர் நீர் குடிக்கவேண்டும்.
எப்படி குடிக்க வேண்டும்:
டம்ளரில் நன்றாக வாய் வைத்து, மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கவேண்டும்.

அப்போதுதான் எச்சில் கலந்து வயிற்றுக்குள் சென்று உணவை ஜீரணிக்க உதவும்.
எதற்காக அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும்?

* போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் தலைவலி, சோர்வு போன்ற உபாதைகள் அதிகம் ஏற்படும்.

* முகத்தில் ஏற்படும் முகப்பரு, அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணத்தால் ஏற்படுகிறது. இத்தகைய அழுக்குகளை வெளியேற்றி பருக்கள் வராமல் தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும்.

* உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டுசெல்ல தண்ணீர் உதவுகிறது.

* உடலில் சேறும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்கவேண்டும்.

* காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அசிடிட்டி நீங்கி உடல் ஃப்ரெஷாக இருக்க உதவுகிறது.