பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்த சோகம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியசாலையில் பிரசவத்திற்காக நிலுக்கா வீரசிங்க (32) என்ற பெண் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு இன்று காலை சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், அதன் பின்னர் அதிக குறுதி பெருக்கு காரணமாக அவசர சிகிக்சை பிரிவிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னரே குறித்த தாயும் சேயும் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நான்கு வயது பெண் குழந்தையொன்று இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது,

இந்த வருடத்திலேயே இவ்வாறான சம்பவம் முதற்தடவையாக இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் இருவரும் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சற்று பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.