வாசித்தால் வாழ்நாள் அதிகரிக்குமாம்: ஆய்வில் அதிரடி தகவல்!

‘உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! சிக்மண்ட் ஃப்ராய்ட் கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகள், அக்கறைகள், ஆர்வங்கள் என  எல்லாம் தங்களைச் சுற்றியே அமைகின்றன.

யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறைச் சிக்கல்கள். இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டும். அதற்கான மாற்று வழிதான் வாசிப்புப் பழக்கம். புத்தகம் வாசித்தால் உங்கள் அறிவு வளர்கிறதோ இல்லையோ ஆயுள் வளர்வது நிச்சயம் என்கிறது ஆராய்ச்சி.

ஆமாம்… சமீபத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாசித்தலுக்கும், ஆயுளுக்கும் உண்டான நெருக்கத்தை  தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 3700 பேரிடம் அவர்களது வாழ்வியல் முறை, படிக்கும் பழக்கம் என்ற ரீதியில் ஆய்வினை மேற்கொண்டனர்.

“காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளைப் படிப்பதே அவதார நோக்கமாக, முகத்தை மூடிக்கொள்பவர்கள் எனக்கு ஆயுள் கெட்டி என்று கர்வப்பட்டுக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள் அல்லாது பல்வேறு புத்தகங்களை படிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள்” என சமூக அறிவியல் மற்றும் மருத்துவப் பத்திரிகையில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை நம்மிடம் இருந்தாலும் சில நேரங்களில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்பாக்ஸில் வந்து விழும் இமெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டே, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்த்து லைக்ஸ் கொடுப்போம். அதேநேரத்தில் ஹெட்செட்டில் பாடல்களையும் கேட்டுக் கொண்டிருப்போம்.

இவற்றையெல்லாம் முழுக்கவனத்தோடு செய்கிறோமா என்றால், இல்லை. எல்லாம் கடமைக்கே. ஆனால், அமைதியான இடத்தில் அமர்ந்து  5 நிமிடங்கள் புத்தகம் படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை  வளர்த்துக்கொள்ளக்கூடிய நீண்டகால பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

நல்ல வாசிப்பிற்கு கவனம் முக்கியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல்களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்கவைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது. இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும்.

வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மனதிற்குப் பிடித்த புத்தகத்தை படிக்கும் போது முதல் 6 நிமிடங்களுக்குள்ளாகவே 68 சதவிகித மன அழுத்தம் குறைந்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது.

ஓர் இசையைக் கேட்பதாலும், நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் குறையும் மனஅழுத்ததைக் காட்டிலும் படிப்பதால் மன அழுத்தம் அதிகம் குறையும். நீலக்கதிர்களைக் கக்கும் மொபைல், லேப்டாப், டேப்லெட், டி.வி எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாக ஒரு புத்தகத்தை படியுங்கள். அப்புறம் பாருங்கள்… தூக்கம் கண்களைத் தழுவும் மாயத்தை! தூக்க மாத்திரையின் அவசியமே இருக்காது. வாசிப்பின் மீது நேசம் வைத்து
வளருங்கள்… உங்கள் சந்ததிக்கே அது நிழல் தரும்.