சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோர் இதனாலேயே உயிரிழந்தனர்…!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் உயிரிழந்தமை தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.

இதில் சுலக்ஷன் துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், நடராசா கஜன் விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குறித்த இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனது மரண விசாரணையின் அறிக்கையில், நீதவான் இவற்றை குறிப்பிட்டுள்ளார். ‘மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சுலக்ஷன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் போது இடம்பெற்ற விபத்தினால் ஏற்பட்ட காயம் காரணமாக கஜன் உயிரிழந்தார்’ என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கின் சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.