வாகன நெரிசலான வீதியில் குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் (வீடியோ இணைப்பு)

சீனாவில் வாகன நெரிசல் நிறைந்த  வீதியில் ஒரு வயது நிரம்பிய குழந்தை விளையாட்டு சைக்கிளில் பயணம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சீஜியங் மாகாணத்தில் உள்ள லிசுயி என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 27 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஒரு வயது ஆண் குழந்தையொன்று தனது விளையாட்டு சைக்கிளில் வீதியிற்குள் திடீரென நுழைந்துள்ளது.

குறித்த வீதியில் எதிர் திசையில் கார்கள், பேருந்துகள் என வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக சென்றுள்ளன.

ஆனால், சிறிதும் அச்சப்படாத அக்குழந்தை வீதியின் மத்தியில் தனது பொம்மை வண்டியில் கடந்து சென்றுள்ளது.

எதிரே வந்த ஒருவர் கூட குழந்தையை காப்பாற்ற முன்வரவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு குறித்த வீதியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக ஓடிச்சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

மேலும், குழந்தையிடம் பேசியபோது அது வழித்தவறி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தையை காணாமல் தேடிய தாயார் அங்கு விரைந்து வந்துள்ளார். பொலிஸார் தாயாரை எச்சரிக்கை செய்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.

வீதியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.