பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும் ஆய்வில் தகவல்..!

பேஸ்புக் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வு ஒன்று ஆச்சர்யமான தகவலைத் தெரிவித்துள்ளது.

செல்போனில் இண்டர்நெட் வசதி கிடைத்த பின்னர், பெரும்பாலானவர்கள் எப்போது பார்த்தாலும் பேஸ்புக், வாட்ஸ்

அப் என சமூகவலைதளங்களில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூட பலர் பேஸ்புக்கில் மட்டுமே பிரண்டாக வைத்துள்ளனர். பல்வேறு நல்ல காரியங்களுக்கு இது போன்ற சமூகவலைதளங்கள் பயன்பட்டாலும், எந்நேரமும் இது போன்று இணையத்திலேயே மூழ்கி இருப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லதில்லை என்ற கருத்தும் உள்ளது.

அதோடு, அக்கம்பக்கத்தாரிடம் பழகும் குணத்தையும் இது போன்ற சமூகவலைதளப் பக்கங்கள் குறைத்து விடுகின்றன. இயந்திரங்களோடு பேசும் குணத்தை இவை வளர்த்து விடுகின்றன என்ற பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

ஆனால், கலிபோர்னியாவில் உள்ள சான்டீயெகோ பல்கலைக்கழக ஆய்வு வேறு மாதிரியான முடிவைத் தந்துள்ளது. அதாவது பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு. பேஸ்புக் பயன்பாட்டுக்கும், மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்த இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதாவது கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைக் குறித்த அந்த மாகாண பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிலும் குறிப்பாக கடந்த 1945ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

இதேபோல், இவர்கள் கடந்த 6 மாதங்களாக பேஸ்புக்கில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் பேஸ்புக்கை அறவே பயன் படுத்தாதவர்களை விட, அதை பயன்படுத்துபவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், பேஸ்புக் பயன்படுத்துபவர்களைவிட, அதைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள், அதிகம் புகைப்படங்கள், தகவல்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் போன்றோர் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே சமூக தொடர்புகளை அதிகளவில் கொண்டிருப்பவர்களின் ஆயுள் அதிகம் என முந்தைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதையே தற்போது இந்த ஆய்வும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.