ஜனாதிபதி வீரப்பேச்சுகளை நிறுத்திக் கொண்டு பிரதமரை பதவி நீக்கவேண்டும் .

பிரதமர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் கையும் களவுமாகவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழலே ஆனால் இதற்கு பிரதானமாக இருந்து செயற்பட்டவர் பிரதமரே.

ஒருபக்கம் ஓய்வூதியம் கோரி அப்பாவி இராணுவ வீரர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தொடர்பில் எந்த வித சலுகையும் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.

மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் பணம் மட்டும் இருந்திருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல மேலதிக கொடுப்பனவுகளையும் கூட வழங்கியிருக்கலாம் அந்தளவு பணம் பறிபோய்விட்டது. எனவும் விமல் குற்றம் சுமத்தினார்.

நாட்டில் குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளை மத்திய வங்கி கொள்ளையே அதனை செயற்படுத்திய பிரதமரின் மூளை பாராட்டப்படத்தக்கதே.

இந்த ஊழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பிரதான காரணியான ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மக்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்.

மாதத்திற்கு ஒரு முறை வந்து வீரமாக கதைபேசும் ஜனாதிபதி தனது வீரத்தனமான பேச்சுகளை நிறுத்திவிட்டு உடனடியாக பிரதமரை பதவில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மத்திய வங்கி ஊழலை நிவர்த்தி செய்ய முடியாது.

இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கா விட்டாலும் நாம் முடிவு எடுப்போம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.