இரண்டு நாளுக்கு மேல் குளிக்காமல் இருந்தால் உடலில் இப்படி பிரச்சினை நடக்குமா?

அனைவர் மத்தியிலும் குளிப்பது ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. பொதுவாகவே தினமும் குளிப்பது, சுத்தமான துவைத்த ஆடைகளை உடுத்தி அன்றைய தினத்தை துவக்குவது தான் சுகாதாரமான செயலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காலை, இரவு என இரண்டு வேளை குளிப்பது தான் சுகாதாரம் என கருதுவோரும் உண்டு. ஒருசிலர் தினமும் குளிக்க கூடாது என்றும், இரண்டு நாள்களுக்கு இருமுறை குளித்தால் போதுமானது என்றும் நினைக்கிறார்கள்.

தினமும் இருவேளை இல்லாவிட்டாலும் ஒரு வேளையாவது குளிக்க வேண்டும். அப்படி குளிக்காவிட்டால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

குளிப்பது சார்ந்து அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் பற்றி பார்க்கலாம்…

சிலர் வியர்வை அதிகமாக வரவில்லை எனில், குளிர் காலங்களில் ஒரு நாள் குளிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால், இது முற்றிலும் தவறு.

வியர்வை சுரக்கவில்லை எனிலும் கூட உடலில் பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தாக்கம் ஏற்படும். எனவே, குளிர் காலமாக இருப்பினும் தினமும் குளிக்க வேண்டியது அவசியம்.

நம் உடலில் அன்றாடம் உருவாகும் நோய்க் கிருமிகளை அழிக்க நாம் தினமும் குளிக்க வேண்டும். இது ஒருவகையில் நமது உடலுக்கு நாமே செய்யும் உதவி ஆகும். இதனால் நமது உடலை இயற்கையாக வலுப்படுத்த முடிகிறது.

பெரும்பாலும் முகத்திற்கு தேய்த்து குளிக்கும் போது, பலரும் கண்களை சுற்றியும், காதுகளின் இடுக்குகளிலும், மூக்கு பகுதியிலும் சரியாக தேய்த்து குளிப்பது இல்லை.

இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கும். எனவே, முகம் தேய்த்து குளிக்கும் போது அதிக கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து விடும், சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும்.

இவை, சருமத்தின் நலனை கெடுப்பவை ஆகும். இதனால், சரும தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகளவு இருக்கின்றன.

உடல்நிலை சரியில்லாமல் போனாலும் கூட, இதமான நீரை கொண்டு, அக்குள், முகம், தொடை இடுக்கு, கழுத்து போன்ற பகுதிகளில் துடைத்து விட வேண்டியது அவசியம். இந்த இடங்களில் தான் அதிகமாக பாக்டீரியா தாக்கம் ஏற்படும் என சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிலர் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன் என தினமும் தலைக்கு குளிப்பார்கள். இது தவறான அணுகுமுறை.

இதனால், முடி அதிகமாக உதிர தான் செய்யும். மேலும், கெமிக்கல் கலப்பு உள்ள ஷாம்பூ கூந்தலின் ஆரோக்கியத்தை மெல்ல, மெல்ல சீர்கெடுக்கும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் குளிக்காமல் இருப்பதால், நமது உடலில் 1000 வகையிலான பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கதவில் கைப்பிடியில் ஆரம்பித்து, குப்பை பையை எடுத்து சென்று வீசுவது வரை நாமே அறியாமல் நமக்கு பல வகையான பாக்டீரியா மற்றும் ஃபங்கஸ் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.

இதில் சில வகை பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு நன்மையையும் விளைவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.