ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை மீள தர வேண்டும் என ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்கப் படைகளை நிலை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அந்த விமானப்படைத் தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை நிலைநிறுத்துவதற்கு விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு தலிபான்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் “விரைவில்” மீளத்தர வேண்டும் என தலிபான்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித்தரவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.







