தமிழகத்தின் தங்கச்சிமடம் பகுதியில் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீன்பிடி தடை காலத்திற்கு பின்னர் கடலுக்கு சென்ற 7 விசைப்படகுகளுடன் 57 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர.
இதனை கண்டித்தும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கடந்த 11 ஆம் திகதி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த போராட்டம் ஓரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் இந்திய மத்திய அரசாங்கத்தை கண்டித்து இன்று மாலை தொடருந்து மறியல் போராட்டம் நடத்த கடற்றொழிலாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதன் காரணமாக தங்கச்சிமடம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், திட்டமிட்டபடி கடற்றொழிலாளர்களும் அவர்களது உறவினர்களுக்கும் பேரணியாகச் சென்று தண்டவாளத்தில் அமர்ந்து இன்று பிற்பகல் 3 மணிமுதல் தொடருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தநிலையில், மறியலில் ஈடுபட்டவர்களுடன் அரச அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதனையடுத்து, இந்த போராட்டத்தை நடத்திய கடற்றொழிலாளர் அமைப்புகள் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் போரட்டத்தை கைவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.







