இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
85 சீனப் பிரஜைகளும் இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல் – 880 விமானம் ஊடாக சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகளும் நாடு கடத்தப்படுவதற்காக வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சீனப் பிரஜைகளுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உட்பட சுமார் 172 அதிகாரிகள் சீனாவுக்கு புறப்பட்டுள்ளனர்