வளர்பிறை பிரதோஷம் மந்திரம்

ருணம். நமக்கு வருத்தம் தரக்கூடிய எந்த கஷ்டமாக இருந்தாலும், அதை ருணம் என்று சொல்லலாம். நோய் நொடி பிரச்சனை, கடன் சுமை, தீராத குடும்ப சண்டைகள் இவைகளை ருணம் என்று சொல்லுவார்கள். செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளை, ருண விமோசன பிரதோஷம் என்று சொல்கின்றோம்.

கஷ்டம் தீர்க்கும் இந்த பிரதோஷ நாளில், நமக்கு இருக்கும் கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்றால், இன்றைய தினம் ஈசனை நினைத்து என்ன பரிகாரம் செய்யலாம். ஈசனது எந்த மந்திரத்தைச் சொன்னால், நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தானாக விலகிச் செல்லும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

உங்களுக்கு தீராத கடன் சுமை இருந்தாலும் சரி, தீராத நோய்நொடி பிரச்சனை இருந்தாலும் சரி, இன்றைய தினம் கட்டாயம் பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் கோவிலுக்கு சென்று, அந்த ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் கையால் வில்வ இலைகளை வாங்கி கொடுத்து, ஈசனை வழிபட ருணம் விலகும். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை.

பிரதோஷம் அன்று சிவன் கோவிலிலேயே அமர்ந்து ஒரு வில்வ இலையில் 3 மிளகு வைத்து சுருட்டி, மென்று சாப்பிடலாம். சிவலிங்கத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட வில்வ இலையை, நாம் சாப்பிடும் போது தீராத நோய் தீரும். உடம்பை பிடித்த தரித்திரம் விலகும் என்பதும் நம்பிக்கை. இது முதல் பரிகாரம்.

இரண்டாவது பரிகாரம். நம்முடைய கர்ம வினைகள் கரைய வேண்டும் என்றால், அன்னதானம் செய்ய வேண்டும். எல்லோராலும் எல்லா நேரத்திலும் பணம் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாது. கொஞ்சம் சர்க்கரையோ வெல்லும் எதுவோ, உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். பிரதோஷ நேரத்தில் கைகளில் இனிப்பு பண்டத்தோடு, ஈசனை 9 முறை வலம் வந்து, கையில் இருக்கும் வெல்லத்தை கோவிலில் இருக்கும் மரத்தடியில் போட்டு விட வேண்டும்.

கோவிலில் மரம் இல்லை என்றால் மரம் இருக்கக்கூடிய இடத்திற்குச் சென்று இந்த வெல்லத்தைக் கொண்டு போய் போட்டு விட்டால், ஈ எறும்புகள் சாப்பிடும். கர்ம வினைகள் குறையும். உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வும் சீக்கிரம் கிடைக்கும். இன்றைய தினம் மாலை பிரதோஷ நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனைத் தரும். இது இரண்டாவது விஷயம்.

ஈசனை வழிபட்டு விட்டோம். வில்வ இலைகளை சாப்பிட்டு விட்டோம். கர்ம வினைகள் குறைவதற்கு, இனிப்பு பொருளையும் தானம் செய்துவிட்டு, அடுத்தபடியாக நம்முடைய கடன் தீர என்ன பரிகாரம் செய்வது. இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம். பிரதோஷ நேரத்திலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

பிரதோஷம் மந்திரம்

9 மிளகு எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையை 9 முறை சுற்றுங்கள். “ஓம் நமோ பகவதே ருத்ராய” என்ற மந்திரத்தை 9 முறை சொல்லி, மிளகை தலையைச் சுற்றி நெருப்பில் போட்டு விட்டால் போதும். நெருப்பில் மிளகு வெடித்து, சிதறுவது போல உங்களுடைய கடன் உங்களை விட்டு வெடித்து சிதறி, தூரம் சென்று விடும். இதுதான் இந்த பரிகாரத்தில் மறைந்திருக்கும் சூட்சமம்.

பிரதோஷ நேரத்தில் நீங்கள் கோவிலில் இருந்தால் சிவ தரிசனத்தை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு செல்லவில்லை, வீட்டிலேயே தான் இருக்கிறீர்கள் என்றால் ஈசனுக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்களுக்கு முன்பு ஒரு மண் அகல் விளக்கில் கற்பூரம் ஏற்றி வைத்து, அந்த நெருப்பில் இந்த மிளகை போடுங்கள்.