தானத்திற்கும், தர்மத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தான் பலரும் இருக்கிறோம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சிறு கடுகளவிலும் தானம் செய்யாமல் இருந்திருந்தால் அவனுக்கு ஈரேழு பிறவிகளிலும் மோட்சம் என்பதே கிடைக்காது. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் தானம் செய்யாதவர்கள் நேரடியாக நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. பிறருக்கு உதவும் மனம் இல்லாதவர்களுக்கு, அடுத்த பிறவியில் அங்ககீனம் ஏற்படும். இத்தகைய தானம் பெரியதா? அல்லது தர்மம் பெரியதா? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.
முதலில் தானத்திற்கும், தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தானம் என்பது ஏதோ ஒரு பிரதிபலன் எதிர்பார்த்து நாம் மற்றவர்களுக்கு செய்யக்கூடியது ஆகும். ஆனால் தர்மம் என்பது எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ஒருவருக்கு மனம் உவந்து செய்வது ஆகும், எனவே தானத்தை காட்டிலும், தர்மமே சிறந்தது என்பதை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடியும். பிரதிபலன் எதிர்பார்த்து செய்யக் கூடியது தானமாக இருந்தாலும், இதற்கும் அதே பலன்கள் உண்டு.
தானம், தர்மம் இரண்டுமே ஒரு மனிதனுக்கு சரிசமமான புண்ணியத்தை சேர்க்கிறது. பிரதிபலன் எதிர்பார்த்து தானம் செய்தாலும், அதற்கும் தர்மத்திற்கு இணையான பலன்கள் தான் கிடைக்கும். எனவே ஒருவருக்கு உதவி என்று கேட்கும் பொழுது செய்ய தயங்காதீர்கள். அவசரத்திற்கு ஒருவர் உதவி கேட்டால் கூட, இந்த காலத்தில் யாரும் செய்வது கிடையாது. தர்மம் என்று வீட்டு வாசலில் வந்து நின்றால் கூட, அவர்களை சந்தேகமாகத் தான் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கிறது.
பிரதிபலன் எதிர்பார்த்து தானே தானம் செய்கிறார்கள்? பிறகு எப்படி தர்மத்திற்கு இணையான பலன்கள் கிடைக்கும்? பிரதிபலன் எதிர்பார்த்தாலும், ஒருவர் கேட்காமலேயே நாம் அவர்களின் நிலை அறிந்து தானம் செய்கிறோம், ஆனால் பிரதிபலன் பார்க்காமல் செய்தாலும், தர்மம் என்பது ஒருவர் கேட்டுத் தான் நாம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் தானமும், தர்மத்திற்கு இணையான இடத்தை பிடிக்கிறது.
பிரதிபலன் எதிர்பாராமல், ஒருவர் கேட்காமல் அவர்களின் நிலை அறிந்து நாம் செய்யும் தர்மமே தலைசிறந்தது ஆகும். போகும் போது என்ன கொண்டு போகப் போகிறோம்? கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த அத்தனையும் உங்களுடன் வரப் போவது கிடையாது. மேல் லோகத்தில் சொர்க்கத்தில் நிம்மதியாக இருக்க இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு தானமோ, தர்மமோ செய்து பழகுங்கள்.