ஈரானில் இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தால் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

ஈரானில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவங்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க அரசினால் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவு தின நிகழ்வு, அவரது கல்லறைக்கு அருகே நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளனர்.

இதன்போது அவரது கல்லறைக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைகிடமாகவுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.