இனி வரும் காலங்களில் அரச வேலை கேள்விக் குறியாகும் வாய்ப்பு!

இலங்கைத் திரைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எதிர்வரும் ஆண்டில் அரசாங்க சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெற மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆட்சேர்ப்பிற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தின் தயாரிப்பு பணிகள் குறித்த வழிகாட்டல்களை வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என்பன கருத்திற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வாகன கொள்வனவு தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடும் தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஆண்டில் அரசாங்க நிறுவனங்களுக்கானத் தளபாடங்கள், காரியாலய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதனை இயன்ற வரை வரையறுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஊழியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுற்றுநிரூபங்களுக்கு அமைய அத்தியாவசியமானது என்றால் மட்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.