வீரன் திரைவிமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வீரன். பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்.

அவென்ஜர்ஸ், ஜஸ்டிஸ் லீக், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த கான்சப்ட் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம். அந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் தமிழில் எடுக்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீரன். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

மேலும் மரகத நாணயம் போல் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இந்த கதைக்களத்தை எப்படி கையாண்டு இருப்பார் என்றும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இதற்கும் மேல் ஹிப் ஹாப் ஆதியை சூப்பர் ஹீரோவாக திரையில் காண அவருடைய ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இப்படி வரிசையாக பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள வீரன் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்
வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் {ஹிப் ஹாப் ஆதி} தனது சிறு வயதில் மின்னலால் திடீரென தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

இதனால், வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து சென்று விடுகிறார். சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் வில்லன் வினய். தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை சூப்பர் ஹீரோவாக மாறி எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
ஹீரோ ஹிப் ஹாப் ஆதி வீரன் படத்தின் மூலம் மீண்டும் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். குமரனாக வரும் போதும் சரி வீரனாக வரும் போதும் சரி பட்டையை கிளப்பி விட்டார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஸ்கோர் செய்துள்ளார். கடந்த சில படங்களாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஆதி, இந்த படத்தில் முழுமையாக பூர்த்தி செய்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

கதாநாயகி வரும் ஆதிரா மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. முனீஸ்காந்த் – காளி வெங்கட் காம்போ அல்டிமேட். இவர்கள் இருவரும் வரும் அனைத்து காட்சிகளிலும் திரையரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் மட்டுமே நிரம்பி இருக்கிறது. வில்லனாக வரும் வினய்க்கு மிகவும் குறுகிய காட்சிகள் மட்டும் தான். அவருக்கு படத்தில் பெரிதும் ஸ்கோப் இல்லை.

ஆனால், இரண்டாவது வில்லனாக வந்த நடிகர் பத்ரி பட்டையை கிளப்பி விட்டார். நடிகர் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதமாக இருந்தது. ஊரில் உள்ள யாரும் வீரன் சாமியை நம்பாத போது, வீரனை மட்டும் நம்பும் முதியவரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது.

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் எடுத்துக்கொண்ட கதைக்களம் படத்தின் பிளஸ் பாயிண்ட். ஊர் எல்லையில் நின்று ஊரை காக்கும் எல்லை சாமி சூப்பர் ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் என்ற கான்சப்ட் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. திரைக்கதையில் தொய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நகைச்சுவையாக இருந்தது. அதை சரியாக செய்த இயக்குனருக்கு பாராட்டு.

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளார். குறை என்று பார்த்தால் மெயின் வில்லன் வினய்க்கு இன்னும் கூட ஸ்கோப் கொடுத்து இருக்கலாம். மற்றபடி இயக்கம், திரைக்கதை, வசனம் அனைத்தும் பக்கா.

ஆடை வடிவமைப்பு ஆதியின் வீரன் லுக்கை வேற லெவலுக்கு எடுத்து சென்று விட்டது. தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. குறிப்பாக சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. எடிட்டிங் பக்கா. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை செம மாஸ்.

பிளஸ் பாயிண்ட்

ஆதி நடிப்பு

முனீஸ்காந்த் – காளி வெங்கட் நகைச்சுவை காட்சிகள்

இரண்டாவது வில்லன் பத்ரி

இயக்கம், திரைக்கதை

வீரனை மட்டுமே நம்பி வாழ்ந்த முதியவரின் கதாபாத்திரம்

ஒளிப்பதிவு

மைனஸ் பாயிண்ட்

வில்லன் என எதிர்பார்க்கப்பட்ட வினய்க்கு சுத்தமாக படத்தில் ஸ்கோப் இல்லை

மொத்தத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ கான்செப்ட் கொண்ட திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. ஆனால், வீரன் இந்த வரிசையில் இடம் பெறவில்லை..