மறைந்த நடிகர் மனோபாலா எழுதிய இறுதி கடிதம்

மனோபாலா
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், காமெடியன், யூடியூப் பிரபலம் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை வெளிக்காட்டியவர் மனோபாலா.

இவர் உடல்நலக் குறைவால் கடந்த மே 3ம் தேதி உயிரிழந்தார், அவர் உயிரிழப்பிற்கு பிறகு அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை பிரபலங்கள் பதிவிட்ட வண்ணம் உள்ளார்கள்.

அப்படி மனோபாலா அவர்கள் பல வருடங்களுக்கு முன் இன்னொரு பிரபலத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

மனோபாலாவின் கடிதம்
40 வருடங்களுக்கு முன்பாக மனோபாலா சித்ரா லட்சுமணனுக்கு இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். அப்போது மனோபாலா, சித்ரா லட்சுமணன், மணிவண்ணன் போன்றோர் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்திருக்கிறார்கள்.

டியர் சித்ரா, என்னமோ சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள்தான். தப்பா இது? ஒரு மன அரிப்பு, எங்கே எப்போது என்று அலைந்து கொண்டிருக்கிற மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஒரு முயற்சி. நாம் அதிகம் பேசிக் கொண்டதில்லை.. பார்டர் தாண்டி நீங்களும் வந்ததில்லை, நானும் வந்ததில்லை. ஏன் தெரியாது.

இப்போது இது ஒரு முயற்சி சித்ரா, நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான்.

ஆனால் இது என்ன சித்ரா எல்லாம் இடறல் மயம், ஏன் இப்படி ஆனது? எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும், என்னை பார்த்து சிரிப்பவர்களை பார்த்து நான் சிரிக்கும் காலம் வரும் சித்ரா.

இது ஒரு அக்கினி நெருப்பு அணைக்கவும் விடாமல் எரிந்து போகவும் விடாமல் மரண அவஸ்தை. எல்லாத்தையும் கண்ணில் காட்டி விட்டு இது உனக்கு கிடையாது என்ற சொல்வது போல இருக்கிறது என பல வருத்தங்களுடன் கடிதம் எழுதியுள்ளார் மனோபாலா.