தூக்கமின்மையை துரத்தும் சித்த மருத்துவம்

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு பெறலாம் என சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்தார். வேலூரை சேர்ந்த சித்த மருத்துவரும், இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:- நம்மில் பலர் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று உடல்மீது அக்கறை காட்டுவோம். உடல் மட்டுமல்ல, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது பலருக்கு தெரியவில்லை. உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருக்கும். அதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும்.

இன்றைய அவசர உலகில் தூக்கம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகளை பெற்றுத்தந்தாலும், அதன் மூலம் பலர் தூக்கமின்றி தவிக்கிறார்கள். மன அழுத்தம் அதிகரித்ததன் விளைவாக தூக்கம் வருவதில் சிரமம், ஆழ்ந்த தூக்கம் வருவதில் சிரமம், தூக்கத்தின்போது இடையிடையே கண் விழிப்பது என பிரச்சினை தொடர்கிறது. தூக்கமின்மைக்கு இதுபோன்ற மனரீதியான காரணங்கள் மட்டுமன்றி தைராய்டு பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய், ஆஸ்துமா, நடுக்கு வாதம், பெண்களை பாதிக்கும் மெனோபாஸ் காலத்துக்கு பிறகு வரக்கூடிய ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களை சொல்லலாம். அதிக மதுப்பழக்கம், மன உளைச்சல், மனப்பதற்றம் போன்ற காரணங்களாலும்கூட தூக்கமின்மை ஏற்படுகிறது.

தூக்கமின்மை பிரச்சினையானது மூளைக்கு போதுமான அளவு பிராணவாயு சேமிப்பு இல்லாததால் ஏற்படுகிறது. மனித மூளையில் 400 ஆயிரம் கோடி பிராணவாயு உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. அதில் ஏற்படும் பற்றாக்குறையால்தான் தூக்கமின்மை ஏற்படுகிறது. மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி இரவில்தான் நடக்கும். அதன் உற்பத்தி குறைவதால் தூக்கமின்மை ஏற்படுகிறது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. சித்த மருத்துவத்தில் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் மெலடோனினை இயல்பாக உற்பத்தி செய்ய முடியும்.

அதற்காகத்தான் சித்த மருத்துவத்தில் உடல் நோய், உள்ள நோய் என இரண்டையும் இணைக்கும்விதமாக சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கீரை அதிலும் குறிப்பாக வில்வம், செம்பருத்தி போன்ற மூலிகைகளுக்கு அதற்கான அபூர்வ சக்தி இருக்கிறது. அமுக்கரா, சடா மஞ்சில் போன்றவற்றுக்கு தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் சக்தி உள்ளது.

எண்ணெய் குளியலுக்கு வாதத்தை சமநிலை செய்யும் தன்மை உள்ளது. எனவே, தவறாமல் வாரத்தில் 2 நாள் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். ஜாதிக்காய் தூளை வெந்நீரில் கலந்து குடிப்பது, தேனில் குழைத்துச் சாப்பிடுவது மற்றும் இரவில் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிடுவது, அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிடுவதும் தூக்கமின்மையை போக்கும். வல்லாரை கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம், பிரம்மி நெய் பயன்படுத்தலாம். தூக்கம் வர வேண்டுமென்றால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தூக்கமின்மை பிரச்சினைக்காக தொடர்ந்து மருந்துகள் எடுக்கக் கூடாது. தூக்கமின்மை ஏன் ஏற்பட்டது என்ற மூலகாரணத்தை கண்டறிய வேண்டும்.

தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கு எதனால் இந்தப்பிரச்சினை ஏற்பட்டது என்று கேட்டறிந்து மருத்துவம் செய்வது சிறந்த தீர்வு தரும். மூலிகை தலையணை தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட மூலிகைத் தலையணைகூட உதவுகிறது. நொச்சி இலை, வேப்பிலை, புங்கை இலை, மருதாணி இலை உள்ளிட்ட சுமார் 10 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையணையில் தலை வைத்து இரவில் தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும். குறிப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ள மருதாணி இலை மற்றும் புங்கை இலை போன்றவை மனதை அமைதிப்படுத்தக்கூடியவை என்பதால் இந்த மூலிகைத் தலையணை நல்ல தீர்வு தரும். இது அல்லாமல் மருதாணிப்பூக்களை தலையணை அருகே வைத்து தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வரும். வெள்ளைப்பூண்டு பற்களை நசுக்கி தலையணை அருகே வைத்தாலும் தூக்கம் வரும்.

ஆக்சிஜனை அதிகம் வரவழைக்கும் தாவரங்களை நாம் தூங்கும் அறையில் வைத்தாலும் தூக்கம் வரும். உடல் சூடு தூக்கமின்மை பிரச்சினைக்கு உடல் சூடும்கூட காரணமாக இருக்கிறது. ஆகவே, உடல் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலரது உடல்வாகு சூடு நிறைந்து காணப்படுவதால் அவர்கள் எண்ணெய் குளியல் செய்வது நல்லது. இரவு தூங்கும்போது தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொண்டு தூங்கினால் சூட்டைக் குறைப்பதுடன் ஆழ்ந்த தூக்கம் வர உதவும். உள்ளங்கை மற்றும் கால் விரல்களில் மருதாணியை அரைத்துப்பூசினால் உடல் சூடு குறைவதுடன் தூக்கம் வரும்.

இரவு தூங்கச் செல்வதற்கும் முன் பாலில் பூண்டுப்பற்களை வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டாலும் தூக்கம் வரும். கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடிப்பது, கசகசா துவையல் சாப்பிடுவதும் தூக்கம் வர உதவும். இரவு உணவுடன் வேக வைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிடுவதும்கூட தூக்கமின்மை பிரச்சினையைப் போக்க உதவும். இதுபோன்று இன்னும் பல்வேறு எளிய முறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.