பொது வெளியில் நடனமாடிய காதல் ஜோடிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.அந்நாட்டில் வசிக்கும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

பொது வெளியில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது அவசியம். பொது இடங்களில் நடனம் ஆடுவது மற்றும் பாட்டு பாடுவது ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது.

அதுவும் வேறொரு ஆணுடன் ஒன்றாக ஆடல், பாடல்களில் ஈடுபடுவதற்கும் தடையுள்ளது.

சம்பவம்
இந்த நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமிர் முகமது அகமதி ஆகிய இளம் ஜோடி ஒன்று பிரசித்தி பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆசாதி கோபுரம் முன்பு கட்டிப்பிடித்தபடி காதல் நடனம் ஆடி உள்ளது.

இதுபற்றிய வீடியோ வைரலானது அவர்கள் சமூக வலைதளங்களிலும் அப்போது பிரபலம் அடைந்து இருந்தனர்.

இஸ்லாமிய சட்ட விதிகளை மீறியதற்காக கடந்த நவம்பரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் கடந்த ஆண்டில் தீவிரமடைந்து இருந்தது.

இந்த சூழலில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ அமைந்து உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

அவர்கள் மீது தெஹ்ரானில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையில் அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் 6 மாதம் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்கள் வலைதளம் பயன்படுத்துவதற்கும் ஈரானை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் இருவரும் தேச பாதுகாப்புக்கு எதிராக சதி திட்டம் தீட்டியுள்ளனர். அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஹகீகி தற்போது குவார்சக் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அந்த ஜோடி தங்களுக்காக வாதிடும் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் சார்ந்த உரிமை இல்லாமலேயே விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இதனால் அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன.