மருத்துவர் அனுப்பிய கிறிஸ்துமஸ் செய்தியால் அதிர்ச்சியடைந்த நோயாளிகள்

பிரித்தானியாவில் உள்ள மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அவர்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் அதன் பின்னர்,அவர் தமது தவறுக்காக மன்னிப்புக் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மெட்டாஸ்டேஸ்கள் கொண்ட தீவிர நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்… நன்றி,” என குறிப்பிட்டு பல நோயாளிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்று 20 நிமிடங்களுக்குப் பிறகு, தென் யார்க்ஷயரின் டான்காஸ்டருக்கு அருகிலுள்ள அஸ்கெர்ன் மருத்துவப் பயிற்சி நிலையத்திலிருந்து மன்னிப்பு கேட்கப்பட்டது.

அத்துடன் “முந்தைய குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கு மன்னிப்பை ஏற்கவும். இது தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் “உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என கூறி மீண்டும் ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, புற்றுநோய் முடிவிற்காக காத்திருந்த ஒருவர் இந்த குறுந்தகவலை பார்த்து கதறி அழுததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.