தயாரிப்பாளர் கே. முரளிதரன் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டுள்ள முதல்வர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா போன்ற பலரின் படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான இவர், வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ‘அன்பே சிவம்’, ‘கோகுலத்தில் சீதை’, ‘அரண்மனை காவலன்’, ‘பகவதி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து விநியோகமும் செய்துள்ளார்.

இறுதியாக இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘சகலகலா வல்லவன்’ படத்தை தயாரித்திருந்தார். அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த முரளிதரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.