நடிகை ரம்யா பிறந்தநாள் அன்று ஓவியம் வரைந்த ரசிகர்

கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. ‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். திரைத்துறைக்கு ரம்யா மீண்டும் மறுபிரவேசம் செய்து உள்ளார்.

‘உத்தர கன்னடா’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது 40-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடினார். அவர் வலைத்தளப் பக்கத்தில் ‘தனக்கு 40 வயது ஆகிவிட்டதாகவும், 40 வயதை எட்டியோர் பட்டியலில் நானும் இடம்பெறுகிறேன்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ரம்யாவுக்கு திரை உலகினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் ரம்யாவின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர் ஒருவர் சுவரில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை வரைந்து அவரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகர் ஆவார். சீட்டுக்கட்டுகளில் ஆர்ட்டின் ராணி கார்டு இருப்பது போல் ரம்யாவின் படத்தை வரைந்து, அவரது தலையில் கிரீடம் சூட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை ரம்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் நடிகை ரம்யாவின் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. அந்த படத்திற்கு அவர்கள் லைக் செய்து வருகின்றனர்.