உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

அமெரிக்க மக்கள் சிப்பி உணவு வகைகளை சாப்பிட வேண்டாம் என 13 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பி வகை உணவுகளால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான அறிவிப்பு
இதனிடையே, பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உறையவைக்கப்பட்ட சிப்பி உணவுகளை தொடர்புடைய நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும் என அமெரிக்காவின் FDA நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

லாஸ் வேகாஸில் சிப்பி உணவுகளை சாப்பிட்ட ஒருவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதுடன் குறித்த சிப்பியில் சப்போவைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டது. மட்டுமின்றி, மேலும் 9 பேர்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 5ம் திகதிவரையான காலகட்டத்தில் சிப்பி உணவுகளை உட்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய்வாய்ப்படும் ஆபத்தில் இருப்பவர்கள் என சமீபத்தில் சிப்பி உணவுகளை உட்கொண்டவர்கள், 13 மாகாண மக்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட FDA நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அலபாமா, கலிபோர்னியா, புளோரிடா, ஜார்ஜியா, மேரிலாந்து, நியூயார்க், நியூ ஜெர்சி, வட கரோலினா, பென்சில்வேனியா, தென் கரோலினா, டென்னசி மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் சிப்பி உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரபல தென் கொரிய நிறுவனம் ஒன்று தங்கள் தயாரிப்புகளை தொடர்புடைய இந்த மாகாணங்களில் இருந்து திரும்பப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.