எரிபொருள் விலை குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும்,இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தில் மாற்றம்

மேலும் தெரிவிக்கையில்“விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி கூறியிருந்தோம். அப்படியான சந்தர்ப்பத்தில் தாங்கள் பொருளாதார இழப்பை சமாளிக்க 14 ஆம் திகதி அல்லது 13ம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள். அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

இது தொடர்பான பிரேரணை திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு எரிபொருள் விலை அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து அறிவிக்கப்படும்.

இதேவேளை எதிர்வரும் மாதத்தில் இருந்து இந்தப் புதிய முறையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.”என தெரிவித்துள்ளார்.