20 ஓவர் உலக கோப்பையில் தோல்வியடைந்த இந்திய அணியை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமர்

20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திடம் மிகவும் மோசமாக தோற்றது. அலெக்ஸ் ஹால்ஸ், பட்லர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைய வைத்தது.

இதற்கிடையே இந்திய அணியின் அரை இறுதி தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டி யில் 152/0 vs 170/0 என பதிவிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இரு அணிகளும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) இறுதி போட்டியில் மோதுவதை பாகிஸ்தான் பிரதமர் கிண்டலுடன் தெரிவித்து இருந்தார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இந்த டுவிட்டர் பதிவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானைபோல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக இர்பான் பதான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் எங்களது நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் நீங்களோ மற்றவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். அதனால் தான் நீங்கள் உங்கள் நாட்டின் நலனில் கவனம் செலுத்தவில்லை. இவ்வாறு இர்பான் பதான் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த டுவிட் தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இறுதி போட்டியில் எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. ஆனால் மன்னிக்கவும். நான் அந்த டுவிட்டை பார்க்கவில்லை. இங்கிலாந்து கடும் போட்டியை அளிக்க கூடிய சிறந்த அணியாகும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். இதுவே அவர்களது திறமைக்கு சான்றாகும். பவர் பிளேயில் விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானதாகும்.