ஐரோப்பிய நாடுகளில் இருந்து பொதி அனுப்புவர்களுக்கான எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஏனைய பல நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு பொதி அனுப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட மர்ம பொதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பொதி அனுப்பும் மக்களின் பொதிகளுக்குள் ஆபத்தான போதை பொருட்களை வைப்பதற்கு கும்பல் ஒன்று உலகம் முழுவதும் இயங்கி வருகின்றது.

அந்த கும்பல் பொது மக்களின் பொதிகளில் நுட்பமாக மறைத்து அனுப்புவதாகவும் இதனால் குடும்பங்களுக்காக அனுப்பப்படும் பொதிகள் உரிய தரப்பினரிடம் சென்றடைவதில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் சிக்கிய இவ்வாறான பொதிகளில் 73,065,000 ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளது.

தபால் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் தனிப்பட்ட பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் தபால் மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த பொதிகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பரிசோதிக்கப்பட்டன.

அந்த சோதனையின் போது, ​​அந்த பார்சல்களில் கவனமாக பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 921 கிராம் குஷ், 106 கிராம் ஐஸ், ஒரு லிட்டர் Organic Hemp Oil (250 மில்லி x 4 போத்தல்கள்), 5272 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள், 2 கிராம் மெண்டி மற்றும் 4 கிராம் ஹஷிஷ் ஆகிய போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதி அனுப்பும் போது அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.