மீண்டும் தேர்தலில் களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தார்.

பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் ட்ரம்ப். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்
கடந்த 2020ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்தார். புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்,

நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016ஆம் ஆண்டு பெற்றதை விட 2020ஆம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன்.

அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த ஜனாதிபதி அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார்.