பிரான்சில் பிஸ்கட் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்ஸில் விற்பனை செய்யப்படும் மில்க் சொக்லேட் Granola மற்றும் டார்க் சொக்லேட் Granola என்ற பிஸ்கட் தயாரிப்புகள் மனித பாவனைக்கு உகந்து அல்லவென கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீளக்கோரப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தயாரிப்பினதும் 195 கிராம் பக்கட் மீளக்கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Granola பிஸ்கட் பிரியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

கோடைக்காலத்தின் இறுதியில் அந்த பிஸ்கட்டில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உள்ளதென கண்டறியப்பட்டது. அப்போது முதலாவதாக மீளக்கோரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் பிரான்ஸ் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள பிக்ஸ்கட் தயாரிப்புகளே தற்போது மீளக்கோரப்பட்டுள்ளது.

Carrefour, Leclerc, Systeme U, Auchan, Simply Market, Casino, Intermarché, Monoprix, Franprix உள்ளிட்ட சுப்பர் மார்க்கெட்களில் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த Granola பிஸ்கட் தயாரிப்புகளில் குறைந்த எண்ணிக்கையிலான நுண்ணிய உலோகத் துகள்கள் இருப்பதாக உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை முதல் இதனை மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்பை உட்கொண்ட பிறகு ஏற்படும் காயம் மற்றும் பாதகமான விளைவுகள் காரணமாக, முன்னெச்சரிக்கையாக, அவற்றினை வைத்திருக்கும் நபர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மீளக்கோரல் நடைமுறை ஒரு மாதம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொள்வனவு செய்த இடத்தில் பிஸ்கட் பக்கட்களை ஒப்படைத்துவிட்டு அதற்கான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பிஸ்கட் தொடர்பில் நுகர்வோர் சேவையைத் தொடர்புகொள்வதற்கு விரும்பும் மக்கள் 09.69.39.79.79. என்ற எண்ணை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.