மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார்,என கூறி நபரொருவரை கொன்ற கணவன்

மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி நபர் ஒருவரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

இச்சம்பவம்தில் உற்று பார்ப்பதாக கூறப்படும் நபரின் பெற்றோரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் பட்டேல். இவரது வீட்டுக்கு அண்டை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் மனக் அஹிர்வார்.

இந்த நிலையில், ஜெகதீஷ் மற்றும் மனக் குடும்பத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது. ஜெகதீஷ், தனது மனைவியை மனக் அடிக்கடி உற்று பார்க்கிறார் என்றும் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்துகிறார் என்றும் கூறி சண்டையிட்டுள்ளார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமவாசிகள் தலையிட்டு, சண்டையை தடுத்து நிறுத்தி, சமரசப்படுத்தி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும், ஆத்திரம் தீராமல் நேற்று காலை, ஜெகதீஷ் பட்டேல் மற்றும் 5 பேர் ஆயுதங்களுடன் மனக் அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இந்த முறை மனக், அவரது பெற்றோர் மற்றும் மனக்கின் சகோதரர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே மனக் மற்றும் வயது முதிர்ந்த அவரது பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.

மனக்கின் சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி பொலிஸ் சூப்பிரெண்ட் தெனிவார் கூறும்போது, பட்டேல் குடும்பத்தினரின் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெகதீஷ் பட்டேலை கைது செய்துள்ளோம். மற்ற 5 பேரை தேடி வருகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.