பொது மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

அவதானம்
அத்தோடு எதிர்வரும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதால் அனர்த்தங்கள் ஏற்படலாம் என்றும் அவ்வாறான பயணங்களில் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் ஒரே நேரத்தில் உயரும் வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பல்வேறு பயணங்களில் ஈடுபடும் மக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்கவும். அந்த இடங்களில் கடமையில் இருக்கும் உயிர்காக்கும் தரப்பினர் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மேலும் அவ்விடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொள்ளுமாறும் இயன்றவரை அவ்விடங்களில் மது அருந்துவதையும் குளிப்பதையும் தவிர்க்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.