மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்த கணவர் கைது!

இந்திய ஹரியானா மாநிலத்தில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸிஸ் அடைத்து வீசிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை கேட்பார் அற்ற நிலையில் ஒரு சூட்கேஸ் மர்மமாக இருந்துள்ளது.

அந்த சூட்கேஸை பொலிஸார் கைப்பற்றி திறந்து பார்க்கையில், நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அப்போது சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்று சூட்கேஸை வீதியில் வைத்து விட்டு சென்றுள்ளார். முச்சக்கரவண்டி எண்ணின் அடையாளத்தை வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது தான் அங்குள்ள சிர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்த அந்த நபர் சவாரிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக சர்ஹவுல் கிராமத்திற்கு சென்று பொலிஸார் விசாரித்ததில் தான் உண்மை அம்பலமானது.

அந்த நபரின் பெயர் ராகுல் என்றும் சூட்கேஸ்சில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரின் மனைவி பிரியங்கா என்பதை பொலிஸார் தெரிந்துகொண்டனர்.

மேலும் ராகுலை பிடித்து விசாரித்ததில், 22 வயதான அவருக்கும் 20 வயதான மனைவி பிரியங்காவுக்கும் இரண்டாண்டுகளுக்கும் முன் திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தையுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுகளுக்கே சரியாக உள்ள நிலையில், மனைவி பிரியங்கா கணவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என நச்சரித்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

மேலும், கோபத்தில் பல முறை கணவரை அறைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி இரவு சண்டை முற்றி அடிதடியானதில் கணவர் ராகுல் மனைவி பிரியங்காவை அடித்து கொலை செய்துள்ளார்.

இரவு முழுக்க மனைவியின் சடலத்தை வீட்டில் வைத்தே குழந்தையோடு பொழுது கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வங்கி வந்துள்ளார்.

பின்னர் மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேஸில் உடலை வைத்துள்ளார். அத்துடன் மனைவியின் கையில் கணவர் ராகுலின் பெயர் பச்சை குத்தி இருந்ததால், அந்த பகுதியில் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார்.

பின்னர் ஆட்டோ பிடித்து ஏறி யாரும் இல்லாத இடத்தில் சூட்கேஸை சத்தமில்லாமல் வைத்து வந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.