மோசடியில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவரை காப்பாற்றுவதற்கு முனைப்பு காட்டும் அரசியல் பிரமுகர்கள்

பாரிய நிதி மோசடியில் ஈடுபடும் கும்பலை காப்பாற்றும் முயற்சியில் பிரபல அரசியல் குடும்பம் ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரிய மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலிக்கு நேரடியாக ஆதரவளித்த ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதனை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

பாரிய மோசடி

ஜானகி சிறிவர்தன கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார். அவரது நிதி பரிவர்த்தனைகள் நாட்டிற்கு தெரியவந்தால், இந்த நாட்டில் உள்ள பலம் வாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்று பெரும் சிக்கலுக்கு உள்ளாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய, அவர் கைது செய்யப்படுவதை தடுக்க பலம் வாய்ந்த அரசியல் குடும்பம் பலத்த தலையீடு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுக்கும் நாமல்

இதுவரையில் ஜானகி சிறிவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, பாரிய பண மோசடியில் ஈடுபட்ட திலினிக்கும் தமது குடும்பத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.