அர்னவ் குறித்து பரபரப்பான ஓடியோவை வெளியிட்டுள்ள திருநங்கை

தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.

ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28-ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் அர்னவ் தன்னை ஏமாற்றியதாக கூறி மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் நடிகை திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அர்னவ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் பழகி வரும் போதே எங்கள் ஊரில் உள்ள மாலில் வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர் கூறினார்.