மனிதர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் குருபகவான்

குரு பகவான் ஆண் கிரகமாகக் கருதப்படுகிறார். ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களைப் பார்க்கும் உரிமையை இவர் பெற்றிருக்கிறார். செல்வம், குழந்தைப் பேறு ஆகியவற்றிற்கு இவர் அதிபதி. மூத்த சகோதரர்கள், சகோதரிகளைப்பற்றிய விவரங்களையும் கூறுவார்.

இவர் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களிடம் நற்குணங்கள், இரக்கம், ஞானம், தலைமை தாங்கும் தகுதி, புகழ், சாஸ்திர அறிவு, பக்தி, சிறப்பான செயல்களைச் செய்யும் ஆற்றல் போன்றவை காணப்படும். குரு பகவான் கணவன் – மனைவிக்கிடையே நல்ல உறவை ஏற்படுத்துவார். குளிர்ச்சியான சுபநோய்களைக் கொடுப்பார். அடக்கம், நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொடுப்பார்.

குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள் கற்றோரையும், பெரியோரையும் மதித்துப் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் காணலாம். மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள். உழைப்பதற்குச் சற்றும் தயங்கமாட்டார்கள்.

இவர்கள் எந்த காரியத்தையும் அவசரப்பட்டுச் செய்ய மாட்டார்கள். நன்கு சிந்தித்துப்பார்த்து முடிவு செய்த பிறகே செயலில் இறங்குவார்கள். குறுக்கு வழியிலோ அல்லது சட்டத்திற்குப் புறம் பான வழியிலோ பணம் சம்பாதிக்க ஒரு போதும் விரும்பமாட்டார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறம்-மஞ்சள், அதிர்ஷ்டம் கொடுக்கும் கல்- புஷ்ப ராகம், மலர்- முல்லை. உலோகம்- பொன். தானியம்-கடலை, மரம்- அரசு, திசை- வடகிழக்கு, சுவை- இனிப்பு, குரு ஒரு ராசியைக் கடந்து செல்லும் காலம்- ஒரு ஆண்டு.

குருவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியவை நட்பு கிரகங்களாகவும், புதனும் சுக்கிரனும் பகைக்கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியவை இரண்டும் சமமாகக் கலந்த கிரகங்களாகவும் விளங்குகின்றன. குரு தனுசு ராசியிலும், மீன ராசியிலும் ஆட்சியும், கடக ராசியில் உச்சமும், மகர ராசியில் நீசமும் அடைகிறார். அவருக்கு மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை நட்பு வீடுகளாகவும், ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் பகை வீடுகளாகவும் விளங்குகின்றன.