அதிகமாக குளிப்பதால் சருமத்திற்கு ஏற்ப்படும் பாதிப்புகள்

தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும்.

ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும்.

சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும். பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம்.

அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத்துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.