தாயாருக்கு பிறந்தநாள் கேக் வாங்க சென்ற சிறுமி சடலமாக மீட்பு!

அயர்லாந்தில் பெட்ரோல் நிலையம் வெடித்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதில் ஒருவர் 5 வயது சிறுமி என தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது தமது தாயாருக்கு பிறந்தநாள் கேக் வாங்க தந்தையுடன் சென்ற நிலையில், இருவரும் மரணமடைந்துள்ளனர். க்ரீஸ்லோவ் பகுதியில் நடந்த இந்த விபத்தில் ராபர்ட் கார்வே மற்றும் இவரது 5 வயது மகள் ஷௌனா உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிக மோசமான விபத்து என பொலிசாரால் கூறப்படும் இச்சம்பவத்தில், சிறுமி ஷௌனா பலியாகியுள்ளது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. சமீபத்தில் தான் பாடசாலைக்கு செல்லத் துவங்கியுள்ளார் ஷௌனா.

தற்போது ஷௌனாவின் மரணம் அவரது தாயாரை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் சிறிய கிராமம் இது, அதனாலையே இப்படியான சம்பவங்கள் மொத்த குடிமக்களையும் பாதிப்பதாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி ஆண்கள் நான்கு பேர், மூன்று பெண்கள், இளைஞர்கள் இருவர் மற்றும் சிறுமி ஒருவர் என மொத்தம் 10 பேர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், உயிர் பிழைத்த மற்ற ஏழு பேர் லெட்டர்கெனி பல்கலைக்கழக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.